» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமர் ஆற்றிய உரை உண்மைக்கு மாறானது: இந்தியக் கம்யூனிஸ்ட் கடும் குற்றச்சாட்டு!

செவ்வாய் 24, மார்ச் 2026 4:40:54 PM (IST)

மக்களவையில் பிரதமர் மோடி ஆற்றிய உரை உண்மைக்கு மாறானது என்றும், நாட்டில் நிலவும் கடும் எரிவாயு மற்றும் உரத் தட்டுப்பாட்டை மறைக்க அவர் முயல்வதாகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சீராக விநியோகம் செய்யப்படுவதாகப் பிரதமர் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் கிடைக்காததால் மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

வணிகப் பயன்பாட்டு எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதால் உணவகங்கள், தேநீர் விடுதிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், பயணிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றித் தவிக்கும் அவலம் நேரிட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை, அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து மோடி அரசு நிறுத்தியதே இந்த எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு முதன்மையான காரணமாகும். இதேபோல், உலகளாவிய போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டையும் மறைத்து, உரம் தட்டுப்பாடின்றி கிடைப்பதாகப் பிரதமர் தவறான தகவலை மக்களவையில் பதிவு செய்துள்ளார்.

மேற்காசியப் பகுதியில் பணியாற்றும் தமிழகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. "ஈரான் மீது ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, உலக நாடுகளிடம் இந்தியா தனிமைப்பட்டு நிற்கிறது.

மத்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொண்டு, ஈரான் மீதான தாக்குதலை நடத்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைக் கண்டிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையுடனும், அமைதியை விரும்பும் உலக நாடுகளுடனும் இணைந்து போரை நிறுத்தவும், நீடித்த அமைதியை நிலைநாட்டவும் இந்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory