» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசுப் பள்ளி ஆசிரியைக்குச் சரமாரி அரிவாள் வெட்டு : குடும்பத் தகராறில் கணவர் வெறிச்செயல்!

செவ்வாய் 17, மார்ச் 2026 8:25:54 AM (IST)

வள்ளியூர் சந்தை அருகே பட்டப்பகலில் அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவரைப் பின்தொடர்ந்து வந்து, அவரது கணவரே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை (42). இவரது மனைவி முத்துச்செல்வி (36). இவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை காரணமாக, கடந்த 4 ஆண்டுகளாக முத்துச்செல்வி தனது கணவரைப் பிரிந்து, வள்ளியூர் சந்தைத் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். 

அங்கிருந்தவாறு தினமும் நாகர்கோவிலுக்குச் சென்று பணிபுரிந்து வருகிறார். தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் முத்துச்செல்வி மீது சேர்மதுரை கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை நாகர்கோவிலிலிருந்து பணி முடிந்து பேருந்து மூலம் வள்ளியூர் திரும்பிய முத்துச்செல்வியை, பேருந்து நிலையத்திலேயே சேர்மதுரை எதிர்கொண்டுள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து சென்று பேச்சு கொடுத்த சேர்மதுரை, திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துச்செல்வியைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து மற்றும் தோள்பட்டையில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு முத்துச்செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த வெறிச்செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தப்ப முயன்ற சேர்மதுரையை விரட்டிப் பிடித்துத் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்த வள்ளியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த முத்துச்செல்வியை மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களிடம் இருந்த சேர்மதுரையை மீட்ட போலீசார், அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் வள்ளியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory