» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தற்பெருமை பேசும் விஜய் ஒரு கிணற்றுத் தவளை; திமுகவின் பி டீம் : பாஜக விமர்சனம்

சனி 14, பிப்ரவரி 2026 4:17:13 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுகவின் நலனுக்காகவே அரசியல் நாடகம் ஆடுவதாகத் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய், "எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அதிமுகவை இபிஎஸ் வைத்துள்ளார், அண்ணா ஆரம்பித்த திமுகவை ஸ்டாலின் வைத்துள்ளார். என்னைப்போலத் தனித்துத் துணிச்சலாகக் கட்சி ஆரம்பிக்க முடியுமா?" எனத் தற்பெருமையுடன் பேசியுள்ளார். ஆனால், யதார்த்தத்தில் அவர் திமுகவிடம் கொள்கைகளையும் தொண்டர்களையும் அடமானம் வைத்துவிட்டு, மக்களைச் சந்திக்காமல் ‘கிணற்றுத் தவளையாக’ அறிக்கை அரசியல் மட்டுமே செய்து வருகிறார்.

யாரோ எழுதிக் கொடுப்பதைப் படித்துவிட்டு அரசியல் வசனம் பேசுவது, அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்தி திமுகவை மீண்டும் அரியணையில் ஏற்றும் ஒரு கண்துடைப்பு நாடகமே தவிர வேறில்லை. விஜய்யின் அரசியல் முதிர்ச்சியின்மையைச் சுட்டிக்காட்டி, பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு சகோதரனாகச் சில ஆலோசனைகளை வழங்கினார்:

விஜய் தனது வீட்டை விட்டு வெளியே வந்து மக்களைச் சந்திக்க வேண்டும்.

குடும்பத்துடன் சுமுகமான உறவைப் பேண வேண்டும்.

தேவையற்ற சர்ச்சைகளில் சிக்காமல், பொதுவாழ்வில் இருப்பவர் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இவை நல்லெண்ணத்தில் சொல்லப்பட்ட கருத்துகள். ஆனால், இதனைத் திசைதிருப்ப திமுகவும், தவெகவும் கைகோர்த்துச் செயல்படுவது அவர்களின் ரகசிய உறவையே அம்பலப்படுத்துகிறது.

தமிழக அரசியலில் 'பிணந்தின்னி அரசியலை' அறிமுகப்படுத்தியதே திமுகதான். இப்போது தவெக தலைவர் விஜய்யும் அதே பாதையில் பயணிக்கிறார். கட்சிக்காக உயிர்நீத்த 41 தொண்டர்களின் தியாகத்தைப் போற்றாமல், அவர்களின் மரணத்தின் மீது நின்று அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.

"தமிழக வெற்றிக் கழகம் என்பது தற்போது ஒரு 'வியாபாரக் கழகமாக' மாற்றப்பட்டுள்ளது. விஜய் ஏன் திமுகவின் வெற்றிக்காகப் பாடுபடுகிறார் என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் விரைவில் பாஜக வெளியிடும்."

பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் பாஜகவைப் பற்றிப் பேச திமுகவிற்குத் தார்மீக உரிமை இல்லை. சட்டப்பேரவையிலேயே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சேலையைப் பிடித்து இழுத்த கலாச்சாரத்தைக் கொண்டவர்கள் அவர்கள் என்பதை மக்கள் மறக்கமாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஏ.என்.எஸ்.பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory