» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் தைப்பூச விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!

புதன் 7, ஜனவரி 2026 12:54:47 PM (IST)

திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருச்செந்தூருக்கு சிறப்பு ரயிலாக நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக குமரி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது. தென் தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையில் விளங்கும் திருச்செந்தூர் புராதனமான புண்ணியத் தலங்களில் ஒன்றாகும். திருச்செந்தூர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. 

இதில்  முக்கியமான தைப்பூசம்  திருவிழா வருகிற பிப்ரவரி மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள். தைப்பூசத் திருவிழாவில் திருச்செந்தூர் கோவில் வாசல்கள் அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்ட இருக்கின்றன. 

1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறும். தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி கோயிலைச் சுற்றி வலம் வந்து, மணிக்கணக்கில் காத்திருந்த பக்தர்களுக்கு அருள் காட்சி அளிப்பார். லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், விரதம் இருந்து சுவாமி அருளைப் பெறுவது இவ்விழாவின் தனிச்சிறப்பு.

திருச்செந்தூரில் உள்ள முருகனை தரிசிக்க திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அதிகப்படியான பக்தர்கள் திருச்செந்தூர்க்கு பயணம் செய்வார்கள். இவ்வாறு செல்லும் பக்தர்கள் வசதிக்காக நேரடி பயணிகள் ரயில்கள் இல்லை. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி சென்றுவிட்டு பின்னர் அடுத்த ரயிலில் திருச்செந்தூர் செல்லலாம் என்றாலும் அதற்கு நாகர்கோவில் - திருநெல்வேலி மார்க்கம் போதிய ரயில் சேவை இல்லை. 

ஆனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலி  திருச்செந்தூர் மார்க்கங்களில் அதிக அளவில் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுவதை காணலாம். இதிலும் குறிப்பாக மதுரை கோட்டம் சார்பாக திருநெல்வேலி  திருச்செந்தூர் வழிதடத்தில் ஒன்று அல்லது இரண்டு சிறப்பு ரயிலை இயக்கி விட்டு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைத்து விடுகின்றனர். 

திருச்செந்தூரிலிருந்து வேறு எந்த ஒரு ஊர்களிலிருந்தும் சிறப்பு ரயிலை இயக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்ற குறை நீண்டகாலமாக உள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்திலிருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம்; சார்பாக ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயிலை திருச்செந்தூருக்கு சிறப்பு ரயிலாக நீட்டிப்பு செய்து இயக்க கோரிக்கை

திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து முருகன்  பக்தர்கள் அதிக அளவு திருசெந்தூருக்கு செல்கின்றனர். இவர்கள் தற்போது பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து காலையில் 7:00 மணிக்கு புறப்படும் 56311 பயணிகள் ரயிலை சிறப்பு ரயிலாக திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இதைப்போல் மறுமார்க்கமாக மதியம் இந்த ரயில் திருச்செந்தூர் சென்று விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு இரவு திருவனந்தபுரம் செல்லுமாறு இயக்க வேண்டும். தற்போது திருநெல்வேலி  திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில்களை இணைத்து ஒரே ரயிலாகவும் இயக்கலாம் என்ற ஆலோசனையும் வைக்கப்படுகின்றது.

திருச்செந்தூர் கோவில் வாசல்கள் அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்ட இருக்கின்றன. ஆகவே இதை கருத்தில் கொண்டு திருவனந்தபுரத்திலிருந்து மாலை 06 மணிக்கு நாகர்கோவில் நோக்கி புறப்படும் 56308  பயணிகள் ரயிலை நாகர்கோவில் டவுன் வழியாக திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். இவ்வாறு நீட்டிப்பு செய்து இயக்கும் போது இந்த ரயில் இரவு சுமார் 11:30 மணிக்கு திருச்செந்தூர் சென்று விடும். இது அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறந்து 1:30 மணிக்கு நடைபெறும் தீபாராதனைக்கு செல்லும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கொல்லம் - செங்கோட்டை -திருநெல்வேலி – திருச்செந்தூர் சிறப்பு ரயில்: கேரளா மாநிலத்தில் கொல்லம் மாவட்டத்தில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வசதிக்காக கொல்லத்தில் இருந்து புனலூர், செங்கோட்டை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூர்க்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

மதுரை -திருச்செந்தூர் சிறப்பு ரயில்: திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவிற்கு  வசதியாக மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

1. புழநி – திருச்செந்தூர் சிறப்பு ரயில்

2. திருத்தணி - திருச்செந்தூர் சிறப்பு ரயில்

3. கோயம்புத்தூர் -திருச்செந்தூர் சிறப்பு ரயில் 

- இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory