» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மல்லர் கம்பத்தில் சாகசம் புரிந்த மாற்றுத்திறனாளிகள் : பார்வையாளர்கள் உற்சாகம்!

சனி 14, ஜூன் 2025 8:08:41 PM (IST)



தூத்துக்குடியில் நெய்தல் கலைவிழாவில் மல்லர் கம்பத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் சாகசம் புரிந்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் நிறுவனம் இணைந்து நடத்தும் நெய்தல் கலைவிழா தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் ஜூன் 13ல் கோலாகலமாகத் தொடங்கியது. இன்று இரண்டாம் நாள் கலைத் திருவிழாவை அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மகளிர் ஆணையத் தலைவி குமாரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் மதுபாலன், துணை பொறியாளர் சரவணன், துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், வட்டச் செயலாளர் கதிரேசன் உட்பட பலர் கொண்டனர்.

கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இவ்விழாவில் பாரம்பரியம்மிக்க மண்சார்ந்த கலைஞர்கள் தங்கள் குழுவினருடன் பங்கேற்று தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் விழா மைதானத்தில் உணவுத்திருவிழா, கைவினைப்பொருட்கள் கண்காட்சி போன்றவையும் நடந்து வருகிறது. நெய்தல் கலைவிழாவின் 2-வது நாள் கலைவிழா இன்று கோலாகலமாக நடந்தது. 

தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூர் அபிநயகீதம் பல்சுவை கலைநிகழ்ச்சி, குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு, ஜமீன் கோடாங்கிப்பட்டி, கொங்கு பண்பாட்டு மையம் - பெருஞ்சலங்கையாட்டம், விழுப்புரம் மாலன் மாற்றுத்திறனாளிகள் மல்லர் கம்பம் குழு, காஞ்சிபுரம் விவேகானந்தா கிராமிய கலைக்குழு, சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் இணைந்து மெட்ராஸ் சந்திப்பு (ஜங்ஷன்) இசைக்குழு - ஒளி இசை இசைக்குழு ஆகியோரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மல்லர் கம்பத்தில் நின்று மாற்றுத்திறனாளிகள் செய்த சாகசம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நெய்தல் கலைவிழாவின் நிறைவு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப் பள்ளி - மங்கள இசை மற்றும் நடனம், நெய்தல் கலைக்குழு - பல்வகை நாட்டுப்புற இசை, அந்தியூர் கலைவாணர் பெருமுரசு கலைக்குழு, தூத்துக்குடி உவரி களியல் கலைக்குழு, உருபாணர் - பண்டைய நாட்டுப்புற இசைக்கருவிகள் இசைக்குழு - நாட்டுப்புற பாடகர் மார்லி அந்தோணியின் நிகழ்ச்சி - நாட்டுப்புற மற்றும் ஒளி இசை இசைக்குழு - அந்தோணிதாசன் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory