» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏழைகளின் மருத்துவர்: பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்!

சனி 7, ஜூன் 2025 5:48:44 PM (IST)

ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.

ஏழைகளின் மருத்துவராக இருந்து, 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவருக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 1929ம் ஆண்டு பிறந்த ரத்தினம் பிள்ளை, 1959ம் ஆண்டு மருத்துவராக தனது பணியை துவங்கினார். அப்போது 2 ரூபாய்க்கு மருத்துவம்‌ பார்த்து இறுதி வரை 10 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பத்து ரூபாயில் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த பத்து ரூபாய் டாக்டர் என பலதரப்பட்ட மக்களாலும் போற்றப்பட்ட டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது முப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர், டாக்டர் டி.கே. சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.

டாக்டர் ரத்தினம் பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மருத்துவ வசதி இல்லாத அக்காலங்களில் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குறைந்த செலவில் அதனை சரி செய்து விடக் கூடிய திறமை வாய்ந்த மருத்துவராக இருந்து வந்தார்.

மேலும், இவர் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமல் மகப்பேறு மருத்துவம் பார்த்து ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்து மிகச்சிறந்த பெயரை இப்பகுதி மக்களிடையே பெற்றார். தொடர்ந்து இப்பகுதியில் ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்து வந்த இவரை இப்பகுதி மக்கள் போற்றி வந்தனர்.

இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளது. அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மருத்துவர் ரத்தினம் பிள்ளை மத்திய அரசிடம் கொடுத்து, மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியிருக்கிறது.

கரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்காமல் மனித நேயத்துடன் நடந்துகொண்டார். இவரின் சமூக சேவையைப் பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று இயற்கை எய்தினார் என்ற தகவல் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அவரது உடலுக்கு பலதரப்பட்ட மக்கள், உள்ளூர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

டாக்டர் டி.ஏ.கே. ரத்தினம்பிள்ளை, சனிக்கிழமை காலை இயற்கை எய்தினார் என்றும், அவரது இறுதி ஊர்வலம் ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, நல்லடக்கம் நடைபெறவிருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory