» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் : அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேச்சு!

வெள்ளி 14, பிப்ரவரி 2025 4:00:28 PM (IST)



பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை நடத்தி வைத்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேசினார். 

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகளின் சார்பில் நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் விழா மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் அரசு செயலாளர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை டி.எம்டி.ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணையர் சமூகநலத்துறை ஆர்.லில்லி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஐ.சா.மெர்சி ரம்யா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை மற்றும் சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து பேசுகையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்றையதினம் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு நடத்தி வைக்கப்படும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். 

கர்ப்பிணி தாய்மார்கள் கருவுற்ற நாளிலிருந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்ற உயரிய நோக்கில் அவர்களுக்கென பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தாய்மை என்பது புனிதமானது மற்றும் அற்புதமானது. குழந்தையை பெற்று வளர்ப்பதில் முழுமையான பொறுப்பு பெண்களிடம் தான் உள்ளது. அதை நம்மால் தவிர்க்க முடியாது. பெண்களால் தான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்.

நல்லதொரு பிள்ளையை பெண்களால்தான் உருவாக்க முடியும் என்பதை வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள நீங்கள் அனைவரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். பத்து மாதம் கஷ்டப்பட்டு குழந்தையை பெற்றெடுக்கிறீர்கள். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு சில உணவு வகைகள் பிடிக்காமல் போகும். ஆனால் கர்ப்பக்காலங்களில் சாப்பிடமால் இருக்க கூடாது. ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் தான் வயிற்றில் வளரும் குழந்தையும் நல்ல ஊட்டச்சத்தோடு பிறக்கும். குறைந்தது 3 முதல் 3½ கிலோ எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்ததான் அக்குழந்தைகளை முழுமையான உடல் தகுதியுடன் நன்றாக வளர்க்க முடியும். 

குறிப்பாக கர்ப்பக்காலங்களில் முட்டை, பால், பழங்கள், பாசிப்பயிறு, தட்டைப்பயிறு உள்ளிட்ட தானிய வகைகள் மற்றும் சத்தான உணவு வகைகளை நாம் சாப்பிடும் போது நாமும் ஆரோக்கியமாக இருப்போம் பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பேறுகாலத்தின் போது எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

மேலும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் தாய்ப்பால் நன்றாக கொடுக்கும் போது தான் குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும். குழந்தைகளுக்குஆறு மாதம் வரைக்கும் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும் அதன் பின் இணை உணவுகளான கீரை, பருப்பு, கஞ்சி, பழங்கள் உள்ளிட்ட எளிய உணவுகளை கொடுக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் இளம் தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு குறித்த உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

மாற்றுத்திறன் அறிகுறிகள் தென்படும் குழந்தைகளுக்கு தொடக்க நிலையிலேயே அதாவது இரண்டு வயதிற்குள் கண்டுபிடிக்கும் பொழுது அதனை நம்மால் சரிசெய்ய முடியும். இப்போது உங்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு மற்றும் ஓய்வு வேண்டும். அதேபோன்று குழந்தை பிறந்த பிறகும் உங்களுக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் குழந்தைக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

உங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்ப பணிகள் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சத்துமாவினை தினமும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதோடு, அனைத்து கர்ப்பிணி தாய்மார்களும் அருகாமையிலுள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு, சுகப்பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்து, உடல் ஆரோக்கியத்துடன் வாழ கேட்டுக்கொள்கிறேன். உடல் ஆரோக்கியத்துடன் என அமைச்சர் பெ.கீதா ஜீவன் பேசினார். 

தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி வைத்து, அவர்களுக்கு 5 வகையான கலவை சாதத்தினை பரிமாறி மகிழ்ந்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயமீனா (பொறுப்பு), நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி மண்டல தலைவர் ஜவஹர், மாநகராட்சி உறுப்பினர் விஜிலா ஜஸ்டஸ், கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory