» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி!
புதன் 3, ஏப்ரல் 2024 5:44:50 PM (IST)
திருநெல்வேலியில் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மக்களவை பொதுத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, கடந்த தேர்தலில் குறைவான வாக்குபதிவான பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து என்.ஜி.ஓ காலனி, ஜவகர் நகர் அமலா பள்ளியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் மாணவ, மாணவியர்களால் மூலம் இன்று (02.04.2024) நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தல்-2024 அனைவரும் வாக்களித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயது நிரம்பிய வாக்காளர்கள்; மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி எற்பு, சுடர் ஓட்டம், மௌனமொழி நாடகம், கிராமிய நடனம், மினி மாரத்தான், வாக்காளர் கல்வியறிவு இயக்கத்தினை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் குறைந்த வாக்குப்பதிவு பகுதிகளிலும், பிற இடங்களிலும் இளம் வாக்காளர்கள், பொதுமக்கள், அனைவரிடமும் வீடு வீடாக சென்றும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், எந்தவொரு வாக்காளரும் விடுப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மூத்த குடிமக்களின் (85 வயதிற்கு மேற்பட்டவர்கள்) வீடுகளுக்கு நேரடியாக சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழ்கள் வழங்கி, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், குறைவான வாக்குப்பதிவான பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து என்.ஜி.ஓ காலனி, ஜவகர் நகர் அமலா பள்ளியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் சார்ந்த சுமார் 200 மாணவ, மாணவியர்கள், மூத்த குடிமக்கள், மற்றும் வருவாய் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இணைந்து இன்று நடத்திய விழிப்புணர்வு பேரணியினை மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தொடங்கி வைத்தார்.
இவ்விழிப்புணர்வு பேரணியானது அமலா பள்ளியிலிருந்து, டிரைவர்ஸ் காலனி, கலைப்பண்பாட்டுத் துறை அலுவலகம் வழியாக என்.ஜி.ஓ நியூ காலனி பூங்கா வந்தடைந்தது. இவ்விழிப்புணர்வு பேரணியில் மாணவர்கள் தேர்தல் திருவிழா, தேசத்தின் பெருவிழா வாக்களிக்க வாருங்கள் என்ற விழிப்புணர்வு பதாகையை ஏந்தி பொதுமக்கள், இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், வாக்காளர் உறுதி மொழியினை அனைவரும் எடுத்தனர். வீடு வீடாக சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதல் வழங்கி வரும் ஏப்ரல் 19 ல் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து என்.ஜி.ஓ நீயூ காலனி ஜவகர்நகர் மாநகராட்சி பூங்காவில் ஓய்வூதியதாரர்கள் சங்கம் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன், பேரிடர் மேலாண்மை வட்டாச்சியர் செல்வன், மாவட்ட தன்னார்வலர் ஒருங்கிணைப்பாளர் சபேசன் , ஓய்வூதிய சங்கத்தினர் நல்லபெருமாள் , மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.