» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட 5.5 சென்ட் நிலம் மீட்பு : மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை!

வியாழன் 2, ஜூலை 2026 7:40:20 AM (IST)



தூத்துக்குடி பண்டுகரைச் சாலையில், தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான 5.5 சென்ட் நிலத்தை அதிகாரிகள் முழுமையாக மீட்டனர்.

தூத்துக்குடி ஆசிரியர் காலனி அருகேயுள்ள சின்னமணிநகர் பண்டுகரைச் சாலைப் பகுதியில் உள்ள மாநகராட்சி நிலத்தை ஒரு தனிநபர் ஆக்கிரமித்திருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்தை மீண்டும் ஆக்கிரமித்த அந்த தனிநபர், தகரத்தால் சுற்றுச்சுவர் கட்டி அடைத்திருந்தார். 

அத்துடன் நில்லாமல், அதன் அருகே இருந்த தங்கதுரை என்பவரின் இடத்தையும், கடையையும் இடித்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது தொடர்பாகத் தங்கதுரை அளித்த புகாரின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் வேலு, முருகேசன் மற்றும் ஒரு பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா பிறப்பித்த உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று புதன்கிழமை காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகச் சின்னமணிநகர் வந்தனர். அப்போது அங்கிருந்த பெண் உள்ளிட்ட சிலர் மாநகராட்சி அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்து நிறுத்த முயன்றனர். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை உடனடியாகத் தடுத்து நிறுத்தி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர், மாநகராட்சி திட்ட செயற்பொறியாளர் (பொறுப்பு) காந்திமதி, உதவிப் பொறியாளர்கள் ஜெயசூர்யா, அனு, சௌந்தர்யா, ராகவி, துர்காதேவி, ஜெயப்பிரியா, நகரச் சார்பு ஆய்வாளர் பால்கண்ணன், சுகாதார அலுவலர் ராஜபாண்டி மற்றும் சுகாதார ஆய்வாளர் சுபியான் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக இடித்து அகற்றி, மாநகராட்சி நிலத்தை மீட்டது. மேலும், அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக மாநகராட்சித் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பெண்கள் உட்படச் சிலர் மீது தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மரிய செஸ்லீ ஸ்டெல்லாJul 2, 2026 - 06:56:04 PM | Posted IP 104.2*****

சட்டம் எப்போதும் தனி நபர் மேல் மட்டும் தான் கடமையை சரியா செய்யும்.தூத்துக்குடியில் வேறு எங்கேயும் ஆக்கிரமிப்பு இல்லையா என்ன... சட்டம் எப்போதும் ஒரு இருட்டறை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory