» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நெல்லையில் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் நிறைவு: முனைய ரயில் நிலையமாக தரம் உயர்வு

புதன் 1, ஜூலை 2026 4:37:30 PM (IST)

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்குட்பட்ட மிக முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தின் யார்டு மறுவடிவமைப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. கடந்த ஜூன் 10 முதல் ஜூன் 30 வரை நடைபெற்ற இந்த மேம்பாட்டுப் பணிகளின் மூலம், நெல்லை ரயில் நிலையம் முழு அளவிலான முனைய ரயில் நிலையமாக (Terminal Station) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் காலத்தில் (01.01.1879) தொடங்கப்பட்ட வரலாற்றுப் பழமை வாய்ந்த இச்சந்திப்பு ரயில் நிலையத்தில், ரயில்கள் வந்து செல்வதில் நிலவி வந்த காலதாமதம் மற்றும் நடைமேடை நெருக்கடிக்கு இத்திட்டம் நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தியுள்ளது. புதிய வடிவமைப்பின்படி, மதுரை, செங்கோட்டை, கன்னியாகுமரி, திருச்செந்தூர் ஆகிய நான்கு வெவ்வேறு வழித்தடங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் ரயில்கள் வந்து சேரவும், இங்கிருந்து புறப்படவும் தேவையான அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை ரயில் நிலையத்தின் ஒட்டுமொத்தக் கொள்ளளவை அதிகரிக்கும் நோக்கில், தற்போது இங்கு செயல்பட்டு வரும் சரக்கு முனையம் (Goods Shed) கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. அந்த இடம் பயணிகள் பயன்படுத்தும் கூடுதல் நடைமேடையாக மாற்றியமைக்கப்படும். மேலும், இருவழிப் பாதை இயக்கத்திற்கு ஏற்ப, தென்காசி மார்க்கத்திலிருந்து வரும் ரயில்களை நேரடியாகப் பிளாட்பாரம் எண் 6-க்கு கொண்டு செல்லும் வகையில் 600 மீட்டர் நீளமுள்ள புதிய பிளாட்பாரப் பாதை (பாதை எண் 9) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களின் நேர மேலாண்மை (Punctuality) பெருமளவில் மேம்படும்.

பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, முந்தைய 'ரூட் ரிலே இன்டர்லாக்கிங்' (RRI) சிக்னல் முறை மாற்றப்பட்டு, அதிநவீன 'எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்' (EI) முறைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ரயில் கண்டறியும் அமைப்புகளான 'டிராக் சர்க்யூட்டுகள்' மற்றும் 'ஆக்ஸில் கவுண்டர்கள்' நிறுவப்பட்டுள்ளன. இப்பணிகள் முழுமையாக நிறைவு பெறும்போது நெல்லை ரயில் நிலையம் 6 நடைமேடைகள், காலி பெட்டிகளை நிறுத்த 7 ஸ்டேப்ளிங் லைன்கள் மற்றும் 3 பிட்லைன்கள் (பராமரிப்புப் பாதைகள்) ஆகிய வசதிகளைக் கொண்டிருக்கும்.

இந்த உள்கட்டமைப்பு மேம்பாடுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள சூழலில், திருநெல்வேலியை மையமாகக் கொண்டு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory