» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி தொகுதி வளர்ச்சி : வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பிரச்சாரம்!

வியாழன் 2, ஏப்ரல் 2026 10:20:49 AM (IST)



தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகள் ஏராளம் என்று அக்கட்சியின் வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் கூறினார். 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிதம்பர நகர் மற்றும் முத்தையாபுரம் பஜார் ஆகிய இடங்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்திற்குச் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ராஜா தலைமை வகித்தார். பகுதிச் செயலாளர் நட்டார் முத்து, தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் தனராஜ், பகுதிச் செயலாளர் சுடலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசியதாவது: "தூத்துக்குடி தொகுதியின் வளர்ச்சிக்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் செய்த சாதனைகள் ஏராளம். குறிப்பாக, இப்பகுதி மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்த குடிநீர் திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக அரசுதான். இன்று நாம் காணும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளும் அதிமுக ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டவை.

மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் பெண்களுக்குத் தாலிக்குத் தங்கம் எனப் புரட்சிகரமான திட்டங்களைச் செயல்படுத்திய பெருமை எங்களையேச் சாரும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமைந்ததும், பெண்களுக்கு எனப் பல்வேறு புதிய நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

இந்த பிரச்சாரத்தில் அனைத்து உலக எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளர் ஹென்றி, அமமுக மாநில வர்த்தக அணித் துணைச் செயலாளர் பாக்ய செல்வன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் லாரன்ஸ், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மாரி செல்வம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் சேகர், எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் வீரபாகு, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ராஜா, பாஜக மாவட்ட மகளிர் அணித் தலைவி வெள்ளத்தாய் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து

BalaApr 2, 2026 - 11:49:20 AM | Posted IP 104.2*****

Nambitom.. Now Thoothukudi Its growing very well. Tuticorin people voice DMK Will continue.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory