» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணி: ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிப்பு!

சனி 28, மார்ச் 2026 5:40:17 PM (IST)

நாகர்கோவில் - இரணியல் இரட்டை ரயில் பாதை பணிகள் காரணமாக 6 ரயில்கள் ரத்து மற்றும் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் ரயில் போக்குவரத்துப் பாதையில், நாகர்கோவில் டவுன் முதல் இரணியல் வரையிலான பிரிவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள இரட்டை ரயில் பாதையில் தண்டவாள நிலவேலைகள் மற்றும் தடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. 

மேலும், இரணியல் ரயில் நிலைய விரிவாக்கப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய பாதையைப் பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்ய உள்ளதால், இப்பிரிவில் ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16729) இன்று (மார்ச் 28, சனிக்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதன் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் புனலூர் - மதுரை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16730), நாளை (மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 30, திங்கட்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்சி - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 30-ஆம் தேதி (திங்கட்கிழமை) திருச்சியிலிருந்து புறப்பட்டு திருநெல்வேலியுடன் நிறுத்தப்படும். அன்றைய தினம் திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே இந்த ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. எனினும், மறுமார்க்கத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்சிக்கு இந்த ரயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட தூர ரயில்களைப் பொறுத்தவரை, திருநெல்வேலி - பிலாஸ்பூர் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 22620), நாளை (மார்ச் 29) தென்காசி, செங்கோட்டை, புனலூர் மற்றும் கொல்லம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதனால் இந்த ரயில் நாகர்கோவில் டவுன் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலையங்களுக்குச் செல்லாது. 

இதேபோல், திருநெல்வேலி - ஜாம்நகர் ரயில் (வண்டி எண்: 19577), வரும் 30-ஆம் தேதி தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் வள்ளியூர், நாகர்கோவில் டவுன், பாறசாலை மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய நிலையங்களுக்குச் செல்லாமல், மாற்றுப் பாதையில் உள்ள தென்காசி, செங்கோட்டை மற்றும் புனலூர் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory