» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது: பாதுகாப்புக்காக கடலில் மிதவைகள் அமைப்பு

செவ்வாய் 18, நவம்பர் 2025 8:51:15 PM (IST)



சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதையடுத்து கன்னியாகுமரியில் ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக காணப்படும். இதனால் இந்த 3 மாதங்களும் இங்கு சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாக கருதப்படுகிறது.

குறிப்பாக டிசம்பர் மாதம் மண்டல பூஜையையொட்டி அய்யப்ப பக்தர்கள் வருகை அதிக அளவில் இருக்கும். மேலும் டிசம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை யொட்டியும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். இதுதவிர ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை மற்றும் மகர விளக்கு தரிசனத்தையொட்டியும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நீடிக்கும்.

இந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை முதல் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்கள் வரத்தொடங்கினர். நேற்று காலையில் கன்னியாகுமரி கடற்கரையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் திரண்டு நின்று சூரிய உதயத்தை கண்டு களித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கடலில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்து நின்று படகில் ஏறி விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர். அங்கிருந்து கண்ணாடி நடைபாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர்.

அய்யப்ப பக்தர்களின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கடற்கரை பூங்கா போன்ற பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அய்யப்ப பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக நகராட்சி சார்பில் மிதவை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு செல்லாமல் கரையிலேயே புனித நீராடி செல்வதற்கு வசதியாக அவற்றை அமைத்துள்ளனர். மேலும் பக்தர்கள் அந்த மிதவையைத் தாண்டி செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory