» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)



குமரி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் திக்கணங்கோடு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, அங்கன்வாடி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வியில் சிறந்து விளங்குகிறது. கல்வி என்பது தமிழ்நாட்டில் மிகவும் பரவலாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிக அளவில் பள்ளிகள் கல்லூரிகள் இயங்கி வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் இன்று கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டமாக உள்ளது. நமது நாட்டிலேயே எர்ணாகுளம் மாவட்டம் கல்வியில் முதல் மாவட்டமாகவும் அதற்கு அடுத்தபடியாக இரண்டாவதாக நமது கன்னியாகுமரி மாவட்டம் கல்வியில் சிறந்து விளங்குகிறது.
 
நமது மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்று தங்களது எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டும். கல்விதான் வாழ்வை மேம்படுத்துவதற்கு மிக முக்கிய கருவியாகும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பள்ளி படிப்புடன் மாணவர்களின் படிப்பு நின்று விடக்கூடாது என்பதற்காக உயர்கல்வி நிலையங்களை அதிக அளவில் தந்தவர். 

தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி செல்லும் குழந்தைகள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அங்கன்வாடி குழந்தைகளின் வருகையை உறுதிப்படுத்துவதற்காக அவர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்திய தமிழ் புதல்வன் திட்டமானது ஒரு மிகச் சிறந்த திட்டம் ஆகும். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் தந்தை உள்ளத்தோடு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார்கள். மேலும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாகவும் பெண் குழந்தைகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டங்களினால் வறுமையில் உள்ள பல்வேறு குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.

கல்வி பயின்றால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்ற ஒரே நோக்கத்தில் தான் தமிழ்நாடு அரசு பல்வேறு இதுபோன்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்துகிறது. நமது மாவட்டத்தில் உயர் கல்வி பயில்வதற்காக பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக அளவில் உள்ளது. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பள்ளிகளுக்கு தனியார் பங்களிப்புடன் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மேஜை மற்றும் நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

பள்ளி மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில் யோகா வகுப்பு, தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலைகள் 400 க்கு மேற்பட்ட பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வழங்கி வரும் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி மாணவர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்று வாழ்வில் உயரிய நிலையை அடைய வேண்டுமென வாழ்த்துகிறேன். 

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் செயல்படும் 10 வட்டாரங்களுக்குட்பட்ட அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வி பயிலும் 2 வயது முதல் 6 வயதுக்குட்பட்ட 21577 பயனாளிகளுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கு ஆயத்த நிலையில் உள்ள வண்ணசீருடைகள் 2 செட் வழங்கப்பட்டது. 

தற்போது 2024 - 2025 ஆம் ஆண்டிற்கு 21057 முன்பருவக்கல்வி பயிலும் பயனாளிகளுக்கும ஆயத்த நிலையில் உள்ள வண்ணசீருடை 2 செட் வீதம் வரப்பெற்று 10 வட்டாரங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில் 2-3 வயதுடைய 11612 குழந்தைகளும், 3-4 வயதிற்குட்பட்ட 7290 குழந்தைகளும், 4-5 வயதிற்குட்பட்ட 2155 குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ராகுல் குமார், தக்கலை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நாகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா, ஜெயா, தக்கலை வட்டார ஒருங்கிணைப்பாளர் கிரிஜா, தக்கலை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அருள்ராஜ், திக்கணங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் அருளானந்த ஜார்ஜ், அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory