» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்!
திங்கள் 3, பிப்ரவரி 2025 4:48:47 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 385 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 12 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.12.21 இலட்சம் மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 21 பட்டதாரிகளுக்கு தலா ரூ.50,000க்கான காசோலையினையும், 8 கிராம் தங்க நாணயமும், 3 பட்டதாரி அல்லாதவர்களுக்கு ரூ.25,000க்கான காசோலையினையும், 8 கிராம் தங்க நாணயமும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் பணியில் இருக்கும் போது உயிரழந்த அங்கன்வாடி பணியாளர்களின் 2 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் ஆட்சியர் வழங்கினார்.
நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்வேல் முருகன், இணை பதிவளார் கூட்டுறவுத்துறை சிவகாமி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தினேஷ், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.