» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நேபாளத்தில் கனமழைக்கு 148 பேர் பலி: வெள்ளத்தில் சிக்கிய 3,100 பேர் மீட்பு
திங்கள் 30, செப்டம்பர் 2024 11:14:05 AM (IST)

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டு பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது; 148 பேர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு இடங்களில் சிக்கி தவித்த, 3,100 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில், சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்குகிறது. அந்நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளை, கடந்த வெள்ளி முதல் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏராளமான கட்டடங்களும், விளைநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர் கனமழையால், 195 வீடுகள் மற்றும் எட்டு பாலங்கள் இடிந்துள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதுடன், பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து பாதித்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை, காத்மாண்டு பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பேரிடர் மீட்பு படையினர் ரப்பர் படகுகள், ஹெலிகாப்டர்களில் சென்று வெள்ள நீர் சூழ்ந்த வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் தவிப்பவர்களை மீட்டு வருகின்றனர். இதுவரை 3,100 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலி எண்ணிக்கை, 148 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காத்மாண்டு பகுதியில், 48 பேரும், மற்ற பகுதிகளில், 64 பேரும் மாயமாகியுள்ளனர்; 45 பேர் காயம் அடைந்துள்ளனர். காத்மாண்டு நகரை அடுத்த தாடிங் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில், பஸ் ஒன்று மண்ணில் புதைந்தது. இதில் சென்ற, 19 பயணியரும் உயிருடன் புதைந்தனர்.
அதேபோல, மாக்வான்பூர் கால்பந்து பயிற்சி மையத்தில் தங்கியிருந்த ஆறு கால்பந்து வீரர்கள் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். நாளை மறுநாள் வரை மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையே, நேற்று முன்தினம் கனமழை பெய்ய காரணம் என்று கூறப்படுகிறது. மழை காரணமாக, நாட்டின் முக்கிய நதியான பாக்மதி ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கனமழையால் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பல பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு சுங்க வரி : டிரம்ப் எச்சரிக்கை!
சனி 17, ஜனவரி 2026 10:19:13 AM (IST)

லடாக்கில் டிரம்ப், நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டம் : சவப்பெட்டியுடன் திரண்ட மக்கள்!
புதன் 14, ஜனவரி 2026 4:51:14 PM (IST)

மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்
திங்கள் 12, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி, பல கோடி உயிர்களை காப்பாற்றினேன்: டிரம்ப் பேச்சு!
சனி 10, ஜனவரி 2026 12:45:36 PM (IST)

இந்தியா - ஐரோப்பா இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றம் ஏற்படும்: ஜெய்சங்கர் உறுதி
வெள்ளி 9, ஜனவரி 2026 5:15:18 PM (IST)

இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவை நிறுத்தம்: வங்காளதேசம் அறிவிப்பு!
வியாழன் 8, ஜனவரி 2026 9:01:04 PM (IST)

