» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரான் அதிபராகப் பதவியேற்கும் மசூத் பெசஷ்கியான்: பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 6, ஜூலை 2024 4:47:24 PM (IST)
ஈரான் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகப் பதவியேற்க உள்ள மசூத் பெசஷ்கியானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி, அஜா்பைஜானிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி மலைப்பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தார். அதையடுத்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த வாரம் (ஜூலை 28) நடைபெற்றது. தோ்தல் முடிவுகளின்படி, சுயேச்சையாகப் போட்டியிட்ட மசூத் பெசஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) கிடைத்தன. சுயேச்சையாகப் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான சயீது ஜலீலிக்கு 94 லட்சம் வாக்குகள் (40.38 சதவீதம்) கிடைத்தன.
இந்த நிலையில், முதல் இரு இடங்களைப் பெற்றவா்களுக்கு இடையே 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் நடத்தப்பட்டது. அதன்படி, மசூத் பெசஷ்கியானுக்கும் சயீது ஜலீலிக்கும் இடையே இரண்டாவது கட்ட தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தோ்தலில், சீா்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர மதநிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலை விட அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, ஈரானின் புதிய அதிபராக மசூத் பெசஷ்கியா விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில், மசூத் பெசஷ்கியானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நம் மக்களின் நலனுக்காவும், இந்த பிராந்தியங்களின் நலனுக்காவும், நெடுங்காலமாக இருந்து வரும் இருநாடுகளின் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்காக மசூத் பெசஷ்கியானுடன் நெருக்கமாகப் பணிபுரிய எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.