» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமர் மோடி குறித்த இழிவான ஏஐ சித்தரிப்பு : மெட்டா தலைமை அதிகாரி மீது வழக்குப் பதிவு!

திங்கள் 3, ஆகஸ்ட் 2026 12:45:47 PM (IST)

PModiMetaIarunSrinivas.jpg

பிரதமர் மோடியின் உருவத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இழிவாகச் சித்தரித்துச் சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரத்தில், 'மெட்டா' நிறுவனத்தின் இந்தியத் தலைமை அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு அவர் மீது எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகக் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' முன்னெடுத்த போராட்டங்களின் போது, பிரதமர் மோடியின் உருவத்தைப் ஆபாசமாகவும் இழிவாகவும் சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகத் தெலுங்கானா மாநில பா.ஜ.க. நிர்வாகி சாய்கிரண் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாய்கிரண் அளித்த புகாரில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை ஏஐ மூலம் இழிவாகச் சித்தரிக்கும் வகையில் இருந்த 20 ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பதிவுகளின் (Reels) இணைப்புகளைப் பகிர்ந்துள்ளார். பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) கீழ், சம்பந்தப்பட்ட சமூக வலைதளக் கணக்குகளை வைத்திருந்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறிப்பாக, இத்தகைய சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களைத் தங்கள் தளங்களில் அனுமதிக்க உதவியதாகக் கூறி, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களின் தாய் நிறுவனமான 'மெட்டா'வின் இந்தியத் தலைமை அதிகாரி அருண் ஸ்ரீனிவாஸ் இந்த எஃப்.ஐ.ஆரில் இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பதிவுகள் குறித்து மெட்டா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஏஐ மூலம் போலி வீடியோக்கள் மற்றும் படங்களைப் பதிவேற்றிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு நேரில் ஆஜராக உத்தரவு:

முன்னதாக, தேர்வு முறைகேடு தொடர்பாகப் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபேஸ்புக்கிலிருந்து தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியிருந்தது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், மெட்டா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

இந்தியாAug 3, 2026 - 02:47:41 PM | Posted IP 104.2*****

ஜனநாயகம் என்ற நிலையில் இருந்து சர்வாதிகாரம் என்ற நிலைக்கு மாறி வருகிறது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory