» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அடிப்படை அரசுப் பணிகளில் பட்டதாரிகள் நுழையத் தடை! – உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

வெள்ளி 5, ஜூன் 2026 12:23:27 PM (IST)

குறைந்த கல்வித்தகுதி கொண்ட விளிம்புநிலை மக்களுக்காக ஒதுக்கப்படும் அடிப்படை அரசு வேலைவாய்ப்புகளை, பட்டதாரிகள் உள்ளிட்ட அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் தங்களது தகுதியை மறைத்துப் பெறுவதை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர், தனது உயர்கல்வித் தகுதியை மறைத்து, பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட தற்காலிக வங்கி உதவியாளர் பணியைப் பெற்றிருந்தார். பின்னர், அவர் பட்டதாரி என்ற உண்மை தெரியவந்ததை அடுத்து, வங்கி நிர்வாகம் அவரைப் பணியில் இருந்து நீக்கியது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவரை மீண்டும் பணியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சார்பில் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவினை விரிவாக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசானுத்தின் அமானுல்லா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, வங்கியின் பணிநீக்க உத்தரவை உறுதி செய்ததுடன் பின்வருமாறு முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்தது:

நீதிபதிகளின் முக்கியக் கருத்துக்கள்:

"சம்பந்தப்பட்ட நபர், தான் ஒரு பட்டதாரி என்ற உண்மையை மறைத்து, 10-ம் வகுப்பு கல்வித்தகுதி கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியைப் பெற்றுள்ளார். நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதிக்கு ஏற்ப, தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அரசுப்பணி கிடைக்கச் செய்ய வேண்டும்.

குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கான பணியை அதிக கல்வித்தகுதி கொண்டவர்கள் பெற அனுமதிப்பது, உண்மையிலேயே தகுதியான விளிம்புநிலை விண்ணப்பதாரரின் வாழ்வாதார வாய்ப்பைத் தட்டிப் பறிப்பதாக அமைந்துவிடும். வாழ்க்கைச் சூழ்நிலை காரணமாக உயர்கல்வியைத் தொடர முடியாமல், அதிக கல்வித்தகுதி கொண்டவர்களுடன் போட்டியிட முடியாதவர்களுக்காகவே சில பணிகளை அரசு ஒதுக்கியுள்ளது. இத்தகைய கொள்கையை நீதிமன்றங்கள் முழுமையாக உறுதி செய்கின்றன."

விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு:

தற்போது 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தகுதியாக அறிவிக்கப்படும் தூய்மைப் பணியாளர்கள், காவலாளிகள், சமையல் உதவியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அடிப்படைப் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்து வேலை பெற்று வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம், தனது சொந்த அலுவலக உதவியாளர் மற்றும் துப்புரவுப் பணியாளர் காலிப்பணியிட நியமனங்களின் போது, குறைந்த கல்வித்தகுதி கொண்டவர்களுக்கே முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டிருந்தது. 

தற்போது உச்ச நீதிமன்றமும் கல்வித்தகுதிக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது நியாயமானதுதான் என்று தீர்ப்பளித்துள்ளதால், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு வேறு வேலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசு வேலைவாய்ப்பு உரிமை சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

கிருஷ்ணன்Jun 6, 2026 - 01:24:12 PM | Posted IP 162.1*****

அருமை வரவேற்கிறோம் 🙏

krishnanJun 6, 2026 - 01:23:37 PM | Posted IP 104.2*****

👍🙏good thanks

krishnanJun 6, 2026 - 01:23:35 PM | Posted IP 104.2*****

👍🙏good thanks

krishnanJun 5, 2026 - 08:01:38 PM | Posted IP 172.7*****

🙏👍

krishnanJun 5, 2026 - 08:01:37 PM | Posted IP 172.7*****

🙏👍

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory