» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டி : மு.க.ஸ்டாலினிடம் நாளை அறிக்கை அளிப்பு

செவ்வாய் 9, ஜூன் 2026 8:22:30 AM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான தி.மு.க. கள ஆய்வு குழுவின் அறிக்கை மு.க.ஸ்டாலினிடம் நாளை சமர்ப்பிக்க இருக்கிறது. இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என்று குழுவிடம் தி.மு.க. நிர்வாகிகள் தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, தி.மு.க.வின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக ‘உடன்பிறப்பே வா' என்ற பெயரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு மாவட்டவாரியாக நிர்வாகிகளை அழைத்து, அவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடினார்.

இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மாற்றமும் மேற்கொள்ளப்பட்டது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தி.மு.க.வில் அமைப்புரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்த்தப்பட்டது. 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 117 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டது.

ஆனால் சட்டமன்ற தேர்தல் நெருங்கியதால் இந்த முடிவு தள்ளிப்போடப்பட்டது.இந்தநிலையில் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., ஆட்சி அதிகாரத்தை இழந்தது. தேர்தல் தோல்விக்கு தி.மு.க. தலைவர் என்ற முறையில் நானே பொறுப்பேற்று கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக 38 பேர் அடங்கிய கள ஆய்வு குழுவையும் நியமித்தார். மேலும் இணையதளம் வாயிலாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.

தி.மு.க. கள ஆய்வுக்குழுவினர் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், வேட்பாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களை தனித்தனியே சந்தித்து அவர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

இந்த கருத்துகேட்பு விவரங்களை அறிக்கையாக தி.மு.க. கள ஆய்வு குழுவினர் தயார் செய்துள்ளனர். இந்த அறிக்கையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (புதன்கிழமை) சமர்ப்பிக்க உள்ளனர்.

தி.மு.க. கள ஆய்வு குழு அறிக்கை கிடைத்தவுடன், கட்சியில் என்னென்ன அதிரடி மாற்றங்களை மேற்கொள்வது என்பது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அப்போது, தி.மு.க. அமைப்புரீதியான மாவட்டங்கள் எண்ணிக்கையை 117 ஆக விரைவில் அதிகரிப்பது. புதிதாக உருவாக்கப்படும் மாவட்ட செயலாளர் பதவியில் இளைஞர்கள், பெண்களை அதிகளவில் நியமிப்பது. கட்சியில் நீண்ட காலம் உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எனவே தி.மு.க. கள ஆய்வு குழு அறிக்கைக்கு பின்னர், தி.மு.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்ற எதிர்ப்பார்ப்பு தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. களவு ஆய்வு குழுவினர் நடத்திய கருத்து கேட்பில், கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பலரும் தங்கள் ஆதங்கத்தையும், மனக்குமுறலையும் கொட்டி உள்ளனர். நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க. தனித்து களம் காண வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தையும் வெளிப்படுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory