» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் படகில் பதுக்கிய 3 அரியவகை ஆமைகள் உயிருடன் மீட்பு!

வெள்ளி 9, மே 2025 8:38:48 AM (IST)



தூத்துக்குடியில் விற்பனைக்காக படகில் பதுக்கி வைத்திருந்த 3 அரியவகை ஆமைகளை வனத்துறையினர் மீட்டு வான்தீவு கடலில் பாதுகாப்பாக விட்டனர்.

தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் சில உயிரினங்கள் வேகமாக அழிந்து வருவதால், அந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. 

அதன்படி, ஆமைகளும் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி கடல் பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த பச்சை நிற ஆமைகள் காணப்படுகின்றன. இதனால் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை பிடிக்கிறார்களா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வனஉயிரின சரக அலுவலருக்கு தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஒரு படகில் கடல் ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த படகை சோதனை செய்தனர். அந்த படகில் 3 அரிய வகையைச் சேர்ந்த பச்சைநிற ஆமைகள் வலைக்குள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. 

ஒரு ஆமை சுமார் 5 அடி நீளமும், 250 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. மற்ற ஆமைகள் தலா 80 கிலோ, 30 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. உடனடியாக அதிகாரிகள் 3 ஆமைகளையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் உரிய பரிசோதனைக்கு பிறகு 3 ஆமைகளையும் படகில் ஏற்றி வான்தீவு பகுதியில் உள்ள கடலில் பாதுகாப்பாக விட்டனர். மேலும், படகில் விற்பனைக்காக ஆமைகளை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

தூத்துகுடிகாரன்மே 9, 2025 - 09:24:54 AM | Posted IP 104.2*****

இவர்கள் போன்ற மீனவர்களால் கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து வருகிறது , சில மீனவர்கள் கடல் வளத்தை சுரண்டி ஆட்டைய போடுவார்கள்.எனவே தூத்துக்குடி முக்கியமான பீச், பொழுதுபோக்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும் , பீச் கு போனாலும் கருவாடு வாடை தான் வருது சுத்தமாக இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory