» சினிமா » செய்திகள்
நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும்: சூர்யா வேண்டுகோள்
சனி 19, ஜூன் 2021 5:39:08 PM (IST)
நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகரும், அகரம் பவுண்டேஷன் நிறுவனருமான சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில், ‘நீட்’ தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் தங்களின் கருத்துகளை 5 பக்கங்களுக்கு மிகாமல் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நீதிபதி ஏ.கே.ராஜன் உயர்நிலைக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம் (3-வது தளம்), கீழ்ப்பாக்கம், சென்னை-600010 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக மருத்துவக் கல்வி இயக்குனரகத்தில் வைக்கப்பட்டுள்ள தனிப்பெட்டியிலோ வருகிற 23-ந்தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகரும், அகரம் பவுண்டேஷன் நிறுவனருமான சூர்யா, இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வின் பாதிப்புகளையும், மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் துயரங்களையும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் முறையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அரசுப்பள்ளியில் படித்து பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு கல்வியே ஆயுதம். இங்கு ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிறது. இருவேறு கல்வி வாய்ப்பு இருக்கிற சூழலில் தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வுமுறை என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா போன்ற பல்வேறு மொழி, பண்பாடு, கலாச்சார வேற்றுமைகள் நிறைந்த நாட்டில், கல்வி என்பது மாநில உரிமையாக இருப்பது அவசியம் என்றும் ‘கல்வி மாநில உரிமை’ என்ற கொள்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று சூர்யா தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.