» சினிமா » செய்திகள்
முதலில் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும் : தேர்தல் தேவையற்றது - கார்த்தி
செவ்வாய் 18, ஜூன் 2019 4:25:45 PM (IST)
"நடிகர் சங்கத் தேர்தல் தேவையற்றது; முதலில் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும்" என பாண்டவர் அணியைச் சேர்ந்த கார்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலின்போது நலிவடைந்த நாடக நடிகர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று பாண்டவர் அணி அறிவித்திருந்தது. அந்த வாக்குறுதி முறையாக நிறைவேற்றப்பட்டது என்றும் அதனால் பலர் பயனடைந்தனர் என்றும் கார்த்தி நேற்று (ஜூன் 17) சேலத்தில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கும்போது தெரிவித்தார்.
"நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்வதில் ஏகப்பட்ட சட்டச் சிக்கல்கள். அதையெல்லாம் தாண்டி ஒரு விஷயத்தைச் செய்து முடிக்கும்போது, இங்கு கிடைக்கும் அன்புதான் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. ‘நீங்க மாசம் ரெண்டாயிரம் ரூபாய் அனுப்புறீங்க தம்பி. அதுலதான் மருந்து வாங்கிக்கிறேன்’, ‘நீங்க அனுப்புற காசை, சீட்டு போட்டுச் சேர்த்து வெச்சு என் பேத்திக்குச் சீர் செஞ்சுட்டேன்’ என வயதான உறுப்பினர்கள் சொல்றாங்க. அப்படி நாங்க அனுப்புற பணம், அவங்க வாழ்க்கையில் ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதுவும் தொடர்ந்து கொடுக்கிறது என்பதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம். இது எப்போதுமே இருக்க வேண்டும் என்றால், அதற்குப் பயங்கர திட்டமிடல் தேவைப்படுகிறது.
முதலில் சங்கக் கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். அந்தக் கட்டடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான், இதுவரைக்கும் நாங்கள் ஆரம்பித்த எல்லா நலத்திட்டங்களையும் தொடர்ந்து செய்ய முடியும். ஒருமுறை ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்டுப் போகும் விஷயமாக இது இருக்கக் கூடாது. அடுத்தடுத்த தலைமுறைக்குத் தொடர்ந்து வரவேண்டுமென்றால், அதற்குப் பெரிய திட்டமிடல் தேவைப்படுகிறது. சங்கத்தின் சட்டத்திட்டங்களைச் சரிசெய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. இதையெல்லாம் செய்து முடிக்க வேண்டுமென நாங்கள் ஆசைப்படுகிறோம். இது பெரிய உழைப்பு. அந்த உழைப்பைப் போடுவதற்கான நம்பிக்கையை நடிகர் சங்க உறுப்பினர்கள் தர வேண்டும்.
இந்த நடிகர் சங்கத் தேர்தல் என்பது எவ்வளவு பெரிய வீண் வேலை என்று யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் ஓட்டு கேட்டு ஊர் ஊராக அலைந்துகொண்டிருக்கிறோம். கட்டடத்துக்கு வேலை செய்யாமல், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம். இது அவசியமே இல்லாத ஒரு விஷயம். ஒரு சங்கத்துக்குள் சுலபமாகப் பேசிக்கொண்டு, அந்தச் சங்கத்தின் நலனுக்காகப் போராடுவோமா? நான் பெரிய ஆள், நான் ஜெயிச்சிக் காட்டுறேன் எனப் போராடுவோமா? இங்கு நம்முடைய உழைப்பு எதைச் சார்ந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி. நியாயமாக இருந்தால் இந்தத் தேர்தலே நடக்கக் கூடாது. கட்டடம் கட்டி முடிக்கும்வரை எல்லோரும் சுமுகமாக இருந்து அந்த வேலையைப் பார்த்திருக்க வேண்டும்” என்று கார்த்தி பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65!!
புதன் 27, ஜனவரி 2021 3:46:46 PM (IST)

அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்
புதன் 27, ஜனவரி 2021 12:04:24 PM (IST)

விஜய் நடித்துள்ள மாஸ்டர் ஜன.29ல் ஓடிடி-யில் ரிலீஸ்
புதன் 27, ஜனவரி 2021 12:01:38 PM (IST)

ஆஸ்கர் போட்டிக்கு சூர்யாவின் சூரரைப் போற்று தேர்வு
புதன் 27, ஜனவரி 2021 10:20:12 AM (IST)

சந்தானம் பிறந்த நாளிளில் சபாபதி போஸ்டர் வெளியீடு
வியாழன் 21, ஜனவரி 2021 12:05:48 PM (IST)

கரோனாவில் இருந்து மீண்ட நடிகர் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மரணம்
வியாழன் 21, ஜனவரி 2021 8:55:50 AM (IST)
