» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைந்துள்ளன: முதல்வர் மு.க. ஸ்டாலின் தகவல்

செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:45:28 PM (IST)



தமிழ்நாடு தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், குற்ற நிகழ்வுகளை தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:  இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாநிலம் முழுவதும் நிகழ்ந்த பல்வேறு வகையான சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஏற்பட்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுக் கூறி இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன. அதேபோல், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும்.

புள்ளி விவரங்களை ஆய்வு செய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.

ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து படைகள் மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், அடிக்கடி குற்றம் நிகழும் இடங்களின் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தும் அறிவியல்பூர்வமாக காவல் துறை செயல்பட வேண்டும்.

பாலியல் ரீதியாகக் குழந்தைகளைத் துன்புறுத்துபவர்கள் மீது  போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தருவதை உறுதி செய்ய வேண்டும். போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வரும், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தனி அக்கறையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு அவர்களுடைய குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.

போக்சோ சட்டம் குறித்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்குக் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சென்று குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் தீமைகளை பற்றியும், அதேபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள்பற்றிய தகவல்களை காவல்துறைக்கு தெரியப்படுத்த அவசரகால உதவி எண்கள் / வாட்ஸ்-அப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து மேற்கொண்டதால் கள்ளச்சாராய விற்பனை குறைந்துள்ளது என்று அறிகிறேன்.  இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். 

மலைப்பகுதிகள் மற்றும் எல்லை மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து கஞ்சா பயிரிடுதல் மற்றும் போதைபொருட்கள் கடத்தலைத் தடுக்க  அனைத்து நடவடிக்கையும்  எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

காவல் துறை சிறப்பாகச் செயல்பட, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதோடு, குற்றவாளிகளை கைது செய்து விரைவில் நீதி பெற்றுத் தருவதிலும் பெரும் கவனம் செலுத்த வேண்டும்.இறுதியாக, நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழவும், தொழில் வளம் மிகுந்த மாநிலமாக, மேலும் வளர்ச்சி பெற, குற்ற நிகழ்வுகளை பெரிதும் குறைத்திடவும், தடுத்திடவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார். 

இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,  உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா,  காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோட்,  தாம்பரம் மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ், ஆவடி மாநகர காவல் ஆணையர் கி. சங்கர், காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ப. முகமது மன்சூர்Sep 26, 2023 - 09:09:51 PM | Posted IP 172.7*****

2021ல் இருந்து குற்றங்கள் இன்று வரை அதிகரித்துள்ளது போல் உணர்கிறேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory