» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 8 பேர் உயிரிழப்பு - 16பேர் காயம்!
புதன் 22, மார்ச் 2023 5:37:43 PM (IST)
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே பட்டாசு ஆலை விபத்தில் 8பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 16 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் என்ற பகுதியில் கடந்த இருபதுஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலைக்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இன்று காலை வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளனர். அப்போது பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நிகழ்ந்தபோதே 5 பேர் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பெண்கள் உள்பட 16 தொழிலாளர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வு மேற்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.