» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 4, ஜூலை 2022 3:14:49 PM (IST)
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2பேரும் கரோனா ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
தந்தை, மகனை காவல் நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்ததாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சிபிஐ கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இவர்களில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவில், இந்த வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் 105 சாட்சிகளில் 30 பேர் மட்டுமே இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். 20 மாதங்களாக சிறையில் உள்ளேன். விசாரணை முடியும் வரை சிறையில் அடைத்து வைப்பது சட்ட விரோதம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். சிபிஐ தரப்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.