» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தைப்பூசம் திருவிழா: தடையை மீறி பழனியில் காவடிகளுடன் குவியும் பக்தர்கள்!
செவ்வாய் 18, ஜனவரி 2022 3:02:09 PM (IST)
பழனியில் தைப்பூசத் திருவிழாவில் தடை விதிக்கப்பட்ட போதிலும் பக்தர்கள் காவடிகளுடன் குவிந்துள்ளனர்.
தமிழர்கள் விமர்சையாக கொண்டாடும் விழாக்களில் ஒன்று தைப்பூசம் திருவிழா. தமிழ் கடவுள் முருகனுக்காக கொண்டாடப்படும் இந்த விழா முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று திரண்டு காவடி சுமந்து, அலகு குத்தி, தேர் இழுத்து கொண்டாடுவர், ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த விழா நடைப்பெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் இன்று மாலை பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்காக சிறிய அளவிலான தேரில் சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து தேரோட்டமும் நடத்தப்படுகிறது. தைப்பூச தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த சில நாட்களாகவே பாத யாத்திரையாக பழனி நோக்கி பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள் கிரி வீதிகளில் காவடியுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட போதிலும் பழனியில் குவிந்துள்ள பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அடிவாரத்தில் இருந்தபடியே சூடம் ஏற்றியும், தீபம் ஏற்றியும் வழிபட்டுச் சென்றனர்.