» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151-வது தைப்பூச திருவிழழ ஜோதி தரிசனம்!
செவ்வாய் 18, ஜனவரி 2022 8:11:20 AM (IST)
வடலூரில் தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (செவ்வாய்க்கிழமை) சத்திய ஞானசபையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 151-வது ஜோதி தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. பின்னர் வள்ளலார் அவதரித்த மருதூர் இல்லத்திலும், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லத்திலும், வடலூர் தருமசாலை, வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் காலை 7.30 மணி அளவில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் இன்று (செவ்வாய்க்கிழமை) சத்திய ஞானசபையில் நடைபெற்றது. இதையொட்டி 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் ஜோதி தரிசன விழா நடைபெற்றது. இந்த ஜோதி தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜோதி தரிசனத்தை தொலைக்காட்சி மூலமாக பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நாளை (புதன்கிழமை) காலை 5.30 மணி என 6 காலங்களில் கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்பு ஆகிய 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஞானசபை வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தும், கட்டுப்பாட்டு அறைகள் அமைத்தும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.