» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குன்னூர் அருகே முப்படை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
புதன் 8, டிசம்பர் 2021 3:12:11 PM (IST)
குன்னூர் அருகே இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ.-17வி5 ரக ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட 14 பேர் பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் குன்னூர்- ஊட்டி இடையே மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளித்தது. உடனடியாக அந்த பகுதிக்கு மீட்புபடையினருடன் விரைந்த குன்னூர் ராணுவ முகாம் அதிகாரிகள் எரிந்த நிலையில் இரண்டு உடல்களை மீட்டனர். இதுவரை 6 உடல்களை மீட்கப்பட்டுள்ளன. மேலும், மலை அடிவாரத்தில் கிடக்கும் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து குறித்து விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.