» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு: முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறைகள்
செவ்வாய் 7, டிசம்பர் 2021 11:31:04 AM (IST)
2022ஆம் ஆண்டுக்கான் டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக, கரோனா பேரிடர் காரணமாக, குரூப் 2, குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், 2022ஆம் ஆண்டில், 5831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5255 காலி பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது.
வரும் ஆண்டில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையின்படி, பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளும் நடத்தப்படும். அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும்.தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும்.
ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தைக் கொண்டே, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்குக் கொணடு வரும் வழியில், விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்யப்பட்டது. எனவே, இனி, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை, தேர்வு முடிந்தபின் தனியாக பிரித்தெடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாலச்சந்திரன் கூறினார்.