» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இனி ஆவின் இனிப்புகள் யாருக்கும் இலவசம் கிடையாது : அமைச்சர் திட்டவட்டம்
வியாழன் 14, அக்டோபர் 2021 12:26:17 PM (IST)
''ஆவின் இனிப்புகளை அதிகாரிகள் பணம் கொடுத்து வாங்க வேண்டும்,'' என, பால்வளத் துறை அமைச்சர் நாசர் கூறினார்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி, ஆவின் நிறுவனத்தில் ஐந்து வகை இனிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு இனிப்புகள் மட்டுமின்றி, ஆவின் நிறுவனத்தின் வழக்கமான பொருட்களின் விற்பனையை அதிகரிப்பது குறித்து, அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர்கள், பொது மேலாளர்களுடன், பால் வளத் துறை அமைச்சர் நாசர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் கூறியதாவது: இந்திய அளவில், ஆவின் நிறுவனத்திற்கு தனி மரியாதை உண்டு. 10 ஆண்டுகளாக ஆவின் சந்தித்த நஷ்ட நிலைமைகள், பொது மேலாளர்கள் அனைவருக்கும் தெரியும். தலைமை சரியாக இருந்தால் தான் எதுவும் சரியாக இருக்கும். இந்தாண்டு, தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளை, அன்பளிப்பு என்று யாரும் எதிர்பார்க்காமல் விலை கொடுத்து வாங்க வேண்டும். தீபாவளி இனிப்புகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில், நான் பணம் கொடுத்து தான் வாங்கினேன். அதேபோல, நிர்வாக இயக்குனரும், பொது மேலாளர்களும் ஆவின் பொருட்களை விலை கொடுத்து வாங்க வேண்டும்.
விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் இனிப்புகள் வழங்கியதில் நடந்த தவறுகள், இந்த ஆண்டு நடக்கக் கூடாது.பால் உற்பத்தியாளர்களுக்கு பணப் பட்டுவாடா வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு முன், இயன்ற அளவில் பால் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், ஆவின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி, ஆவின் லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.