» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மருத்துவம், பொறியியல் படிப்புகளில் 2.5% சிறப்பு இட ஒதுக்கீடு: சீமான் வலியுறுத்தல்
புதன் 22, செப்டம்பர் 2021 5:16:33 PM (IST)
அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 37,500 அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 46 இலட்சம் மாணவர்களும் சுமார் 8, 300 அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஏறத்தாழ 22 இலட்சம் மாணவர்களும் பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய அதில் சரிபாதியளவு மாணவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே அதிக அளவில் பயில்கின்றனர். குறிப்பாக அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் ஆதரவற்ற மற்றும் குடும்ப வறுமை காரணமாக விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாகவே அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசே ஊதியம் வழங்குவதோடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி, மிதிவண்டி, புத்தகங்கள், உதவித்தொகை என அத்தனை கல்வி உரிமைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் எவ்வித பாகுபாடுகளும் இல்லாமல் தமிழ்நாடு அரசால் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஒன்றிய அரசினால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் நுழைவுத்தேர்வுகளினால் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய கிராமப்புற மாணவர்களது மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி கனவுகள் கானல் நீராகும் பேராபத்து ஏற்பட்டது. அத்தகைய கொடுந்தேர்வுகளை முற்றிலுமாக ஒழிப்பதே பாதிக்கப்படும் மாணவர்களின் நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதால் தொடக்கம் முதலே நாம் தமிழர் கட்சி அதனைக் கடுமையாக எதிர்த்துப் போராடி வருகிறது. இருப்பினும் முழுமையான விலக்கினைப் பெறும்வரை தற்காலிகத் தீர்வாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் முந்தைய அதிமுக அரசினாலும், பொறியியல் படிப்பில் தற்போதைய திமுக அரசினாலும் வழங்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது.
இருப்பினும் தமிழ்நாடு அரசின் இத்தகைய தற்காலிக தீர்வுகள்கூட அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எட்டாக் கனியாகியிருப்பதுதான் மிகுந்த ஏமாற்றத்தையும், மன வேதனையையும் அளிக்கிறது. மற்ற எல்லாக் கல்வி உரிமைகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இணையாக வழங்கிடும் தமிழ்நாடு அரசு, இன்றியமையாத இட ஒதுக்கீடு உரிமையும், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்திட வழிவகைச் செய்ய வேண்டும் என்பதே கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் மிகமுக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆகவே அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதலே மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் 2.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கிட, தமிழ்நாடு அரசு உரியச் சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மாநில பகுஜன் சமாஜ்: புதிய அரசியல் கட்சி தொடங்கினார் ஆம்ஸ்ட்ராங் மனைவி..!!
ஞாயிறு 6, ஜூலை 2025 11:11:26 AM (IST)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து அதிகரிப்பு, விலை குறைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி!!
ஞாயிறு 6, ஜூலை 2025 10:00:11 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பாதுகாப்பில் 360 டிகிரி கேமரா ஜிபிஎஸ் வாகனங்கள்: ஏடிஜிபி துவக்கி வைத்தார்
சனி 5, ஜூலை 2025 8:00:37 PM (IST)

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகல்!
சனி 5, ஜூலை 2025 5:15:49 PM (IST)

விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ. 5 இலட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
சனி 5, ஜூலை 2025 4:39:34 PM (IST)
