» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு: கருணாநிதி உருவ படம் திறப்பு
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 5:14:25 PM (IST)
தமிழக சட்டப் பேரவை நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று, முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் கலைஞரின் படத்திறப்பு விழா ஆகியவற்றில் கலந்துகொள்ள இன்று (02.08.2021) மதியம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்டைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித்,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஆ.ராசா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைமைச் செயலகம் விழாக் கோலம் பூண்டுள்ளது. மாலை 5 மணிக்கு சட்டமன்றத்தில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் சட்டப் பேரவை நூற்றாண்டு விழா தொடங்கியது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்றுள்ளார். முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் உருவப்படத்தைத் அவர் திறந்து வைத்து உரையாற்றினார்.
மேலும், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் உரையாற்றுகின்றனா். விழாவின் நிறைவாக, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி நன்றி கூறுகிறாா். சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு மாலை 6.15 மணிக்கு ஆளுநா் மாளிகைக்குச் செல்லும், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், செவ்வாய்க்கிழமை (ஆக.3) காலை சென்னையிலிருந்து புறப்பட்டு கோவை சென்று அங்கிருந்து உதகமண்டலம் செல்ல உள்ளாா்.