» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசின் துறைமுக மசோதாவுக்கு எதிர்ப்பு: கடலோர மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

செவ்வாய் 22, ஜூன் 2021 5:02:33 PM (IST)

மாநில அரசின் பல அதிகாரங்கள் மத்திய அரசுக்குச் செல்லும் வகையில் புதிய மசோதா அமைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்ட முன்வடிவு குறித்து குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநிலங்களின் முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இந்திய துறைமுக மசோதாவை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க ஜூன் 24 அன்று மாநில முதல்வர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் (எம்எஸ்டிசி) அழைப்பு விடுத்துள்ளது.

ஏற்கெனவே உள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன்படி, திட்டமிடல், மேம்பாடு, ஒழுங்குபடுத்துதல், சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. புதிய மசோதா இதனை மாற்றுவதாக உள்ளது. இந்த அதிகாரங்களை கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சிலுக்கு மாற்றுவதாக அமைந்துள்ளது. எம்எஸ்டிசி இதுவரை ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே உள்ளது. மேலும், மாநில அரசின் பல அதிகாரங்கள் மத்திய அரசுக்குச் செல்லும் வகையில் புதிய மசோதா அமைந்துள்ளது.

ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால், புதிய மசோதா சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில், நீண்டகால பாதகமான விளைவுகளை உருவாக்கும். ஏனெனில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசு இதில் எந்தவொரு முக்கியப் பங்கையும் ஆற்ற முடியாது. நாங்கள் ஏற்கெனவே இந்த விவகாரத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கொண்டுசென்றுள்ளோம். மாநிலத் தன்னாட்சியை இதன் மூலம் குறைப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.

எனவே, இந்த புதிய மசோதாவுக்கு அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும், இப்புதிய மசோதாவுக்கு எம்எஸ்டிசி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory