» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து இலங்கை அதிபருடன் பேச்சு: விஜய் வசந்த் வலியுறுத்தல்!
திங்கள் 16, டிசம்பர் 2024 12:33:59 PM (IST)
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இலங்கை அதிபருடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்று விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படுவது மற்றும் கைது செய்வதை இந்தியா வந்துள்ள இலங்கை அதிபருடன் பேசி தீர்வு காணவேண்டும் எனவும், இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோர வேண்டுமெனவும், அதை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முன்மொழிந்தார்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் அவர்களை சிறை பிடித்து அவர்களது உடைமைகளையும் கைப்பற்றி வருகிறது. 2024 ஆம் ஆண்டு மட்டும் 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடி படகுகள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகம். இலங்கை அரசின் அத்துமீறல் அதிகரித்து வருவதற்கு இதுவே சான்று.
1974 ஆம் ஆண்டு இந்திய இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இரண்டு அரசுகளும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குழுக்கள் அமைத்து தீர்வு காண முன் வர வேண்டும்.இலங்கை அரசு உடனடியாக அங்கு கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும். இதனை இலங்கை அதிபருக்கு இந்திய பிரதமர் மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எடுத்துரைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.