» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கபீர் புரஸ்கார் விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு
வெள்ளி 13, டிசம்பர் 2024 12:44:32 PM (IST)
கபீர்புரஸ்கார் விருது பெற தகுதியானவர்கள் இணையதளம் மூலம் டிச.15க்குள் விண்ணப்பித்திட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான "கபீர் புரஸ்கார் விருது. ஒவ்வொரு ஆண்டும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர். இவ்விருதானது. ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது. முறையே ரூ.20,000/- ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/-க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். 2025-ஆம் ஆண்டு. குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தகுதியானவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பித்திட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அண்ணா விளையாட்டரங்கம், நாகர்கோவில் என்ற முகவரியில் நேரிலோ (அ) 04652-262060 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் தமது செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.