» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

17 வயது நர்சிங் மாணவிக்கு குழந்தை பிறந்தது: மாணவன் மீது போக்சோ வழக்கு

செவ்வாய் 22, அக்டோபர் 2024 8:11:23 PM (IST)

அம்மாண்டிவிளை அருகே  17 வயது நர்சிங் மாணவிக்கு குழந்தை பிறந்த விவகாரத்தில் மாணவன் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது.

குமரி மாவட்டம் அம்மாண்டிவிளை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது பெண் தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்த்த 19 வயது வாலிபரும் சென்னையில் உள்ள மற்றொரு கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பள்ளியில் படிக்கும் போதே 2 பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு வரும்போது காதலர்கள் இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளனர். மேலும் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் சென்று ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விடுமுறை முடிந்து மாணவி சென்னைக்கு சென்றார்.

பின்னர் மாணவி சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பார்த்த உறவினர் அவரது உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கவனித்து, அவரிடமே கேட்டுள்ளார். பிறகு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு உறவினர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். 

உடனே பெற்றோர், மகளிடம் தீவிரமாக விசாரித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் காதலை ஏற்றுக் கொண்டனர். ஆனால் 2 பேருக்கும் திருமணத்திற்கு ஏற்ற வயது இல்லை என்பதால் திருமண வயதை அடைந்ததும் திருமணம் செய்து வைக்கலாம் என பேசி முடித்துக் கொண்டனர்.

இதற்கிடையே மாணவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனே சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மாணவிக்கு திருமணம் ஆகாமல் குழந்தை பிறந்ததை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதுகுறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவம் நடந்தது கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டிவிளையை அடுத்துள்ள கிராமம் என்பது தெரியவந்தது. இதையடுத்து புகார் மீதான விசாரணையை குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். பின்னர் மாணவியை கர்ப்பமாக்கியதாக மாணவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory