» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆபாச வீடியோ எடுத்து இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் தலைமறைவு!

வியாழன் 16, மார்ச் 2023 12:13:30 PM (IST)

கன்னியாகுமரியில் ஆபாச வீடியோ எடுத்து இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவான மதபோதகரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் 27 வயதான மதபோதகர்  ஒருவர் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். 

தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்தார். இதனை வீடியோவும் பதிவு செய்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், தனக்கு நடந்ததை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதற்காக அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மதபோதகரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத் தளங்களில் அவர் இளம்பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் மதபோதகர், கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இருந்து தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

இதற்கிடையே சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வேறு மதபோதகர் நியமிக்கப்பட்டுள்ளார். மதபோதகர் மீதான பிடி இறுகுவதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது. இதற்கிடையே கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் மதபோதகர் இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். அதோடு மதபோதகர் தொடர்பான ஆபாச வீடியோக்களையும், பதிவுகளையும் ஒப்படைப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்குள் அனைத்து வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதபோதகர் செல்போன் மற்றும் லேப்-டாப்பில் பல்வேறு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மதபோதகர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை தெரியவரும். பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட மதபோதகர் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட மதபோதகர் அரசியல் கட்சி தலைவர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

இதனிடையே மதபோதகரால் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், "நான் மதபோதகர் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாக பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னை தொட்டு பேச தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு தல பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி பேசினார்.

ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் இவ்வாறாக அவர் நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இதுதொடர்பாக மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது. நர்சிங் மாணவி புகாரை தொடர்ந்து கிறிஸ்தவ மதபோதகர் லீலை விவகாரம் வேகம் எடுத்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளனர்.


மக்கள் கருத்து

நாம்Mar 18, 2023 - 10:23:47 AM | Posted IP 162.1*****

தமிழர் பேரை கெடுத்து விட்டான்

tamilanMar 16, 2023 - 01:13:14 PM | Posted IP 162.1*****

intha paathiriyar meethu pugar vanthu pala natkal agiyum innum kaavalthurayinar kaithu seyyathathu yeno??? yarudaya aluththam kaavalthurayinarai intha ayokiyanai kaithu seyyavidama thadukirathu??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory