» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள்

செவ்வாய் 6, டிசம்பர் 2022 5:03:08 PM (IST)

குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த 115 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் இயங்கும் குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் மொத்தம் 490 கோவில்கள் உள்ளன. இதில் செங்கோட்டை தாலுகாவில் உள்ள கோவில்களும் அடங்கும். இதில் சில குறிப்பிட்ட கோவில்களில் மட்டும் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள 100 முதல் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில்களை தேர்வு செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சுசீந்திரம் தாணு மாலயசுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவில், கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த அடிப்படையில் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ரூ.1 கோடி செலவிலும், பத்மநாபபுரம் நீலகண்ட சாமி கோவிலில் ரூ.2½ கோடி செலவிலும் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது.

மேலும் 11 சிவாலயங்களில் ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. மேலும் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 100 கோவில்களில் ரூ.100 கோடி செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற உள்ளது. இந்த கோவில்களில் அடுத்த ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் முடிக்கப் பட்டு கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தங்கத் தேர் செய்வதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை. 

இந்த கோவிலின் வெளிப்பிரகாரத்தில் போதுமான இடவசதி இல்லாததால் தங்கத்தேர் ஓடுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுஉள்ளது. அதேபோலகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது சம்பந்தமான எந்த திட்டமும் தற்போது இல்லை. ஏற்கனவே கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டுவது குறித்து மண் ஆய்வுகள் செய்யப்பட்டு விட்டது. மேற்கொண்டு அது சம்பந்த மாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இணை ஆணையர் ஞானசேகர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory