» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பாரத் நெட் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்!
வெள்ளி 2, டிசம்பர் 2022 12:00:30 PM (IST)
பாரத் நெட் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களை டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தினார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு கண்ணாடியிழை வலையமைப்பு நிறுவனத்தின் ஆய்வுக்கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, துறை அலுவலர்கள், ஒப்பந்ததார்கள் உள்ளிட்டோரிடம் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் – தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதியை வழங்கும் "பாரத் நெட்" திட்டம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் நிலை மற்றும் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.
மேலும், மாவட்டம் வாரியாக நடைபெற்று வரும் பணிகளின் விபரம் மற்றும் பணிகள் மேற்கொள்ளும் போது ஏற்படும் சிரமங்கள் குறித்து ஒப்பந்தக்காரர்கள் விளக்கினார்கள். அவையனைத்தையும் கேட்டறிந்ததோடு, பணிகளை துரிதப்படுத்தவும், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் பாரத் நெட் திட்டப்பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், நிர்வாக இயக்குனர் கமல் கிஷோர், தலைமை தொழில்நுட்ப அலுவலர் ராபர்ட் ஜெரால்ட் ரவி மற்றும் ஒப்பந்த நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.