» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: ஆட்சியர் ஆய்வு!
சனி 26, நவம்பர் 2022 5:10:13 PM (IST)
நாகர்கோவிலில் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரி மற்றும் செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், இன்று (26.11.2022) நேரில் பார்வையிட்டு தெரிவிக்கையில் "இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி 01.01.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2023 நடைபெற்று வருவதன் தொடர்ச்சியாக 01.01.2023-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தில் 18 வயது பூர்த்தியானவர்கள் தங்களது பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், பெயர் நீக்கம், தொகுதி/முகவரி மாற்றம் மற்றும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்தல் தொடர்பாக 08.12.2022 வரை கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளுக்கான படிவங்களான 6, 6A, 6B, 7 மற்றும் 8 வழங்கலாம்.
மேலும், 01.04.2023, 01.07.2023 மற்றும் 01.10.2023 ஆகிய தினங்களை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தியடையும் இளம் வாக்காளர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு முன்னதாக பதிவு செய்ய மேற்குறிப்பிட்ட தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் படிவம் 6-னை பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதுகுறித்து, தென்திருவிதாங்கூர் இந்து கல்லூரி மற்றும் செட்டிக்குளம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் நடைபெற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் குறித்து இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் அதிகளவில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளில் நாளை 27.11.2022 (ஞாயிற்றுக் கிழமை) அன்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் மேற்படி வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார். ஆய்வில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் க.சேதுராமலிங்கம் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.