» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போலீசார் சித்திரவதையால் குலசேகரம் வாலிபர் பலி : பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்
செவ்வாய் 28, ஜூன் 2022 11:14:27 AM (IST)
திமுக ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
குமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலைத்தில் கையெழுத்திட்டு போடச் சென்ற அஜித் என்ற இளைஞரை போலீசார் காவல் நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்துப் போடச் சென்ற 22 வயது இளைஞர் அஜித் என்பவர் காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு மரணித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. இறந்தவர் குடும்பத்திற்கு தமிழக பாஜக ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.
இறந்த இளைஞனின் தாயின் வேதனையைப் போக்க இழப்பீடு மட்டும் போதாது. திமுக ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகிவிட்டது. கட்டுப்பாடின்றி இருக்கிறதா தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு என்ற சந்தேகத்தையும் இதுபோன்ற சம்பவங்கள் எழுப்புகிறது. சிபிசிஐடிக்கு இந்த வழக்கை உடனடியாக மாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம்" என்று தெரிவித்துள்ளார்.