» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் போலீசிடம் ஆபாசமாக பேசிய கைதி மீது வழக்கு
புதன் 22, ஜூன் 2022 10:58:37 AM (IST)
இரணியல் அருகே பெண் போலீசிடம் ஆபாசமாக பேசி பணி செய்ய விடாமல் தடுத்த கைதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் இரணியலை அடுத்த நெய்யூர், சாக்கியான் கோடு பகுதியைச் சேர்ந்தவர் தனேஷ் (25) அவர், கடந்த 2020-ம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறை சுவரில் மோதி தலையில் காயம் அடைந்த அவரை, ஆயுதப்படை போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சைக்கு செல்லும் வழியில் தனேஷ் திடீரென 'டீ' வேண்டும் என கேட்டு உள்ளார். கைதியை அழைத்துச் செல்லும் போது வேறு எங்கும் வாகனத்தை நிறுத்த முடியாது என கூறிய போலீசார், ஆஸ்பத்திரிக்குச் சென்றதும் டீ வாங்கித்தருவதாக கூறி உள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த தனேஷ், டீ கேட்டு தகராறு செய்ததோடு ஆபாச வார்த்தைகளையும் உபயோகித்துள்ளார். மேலும் தனது சட்டையை கழற்றிய அவர், நான் ஓடுகிறேன். சுடு... சுடு.. என போலீசாரிடம் கூறுகிறார். அவரை போலீசார் சமரசம் செய்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைதி தனேஷ், அடிக்கடி இது போல போலீசாரிடம் வாக்குவாதம் செய்வார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த, ஆயுதப்படை பெண் போலீஸ் அஞ்சு (20) மற்றும் போலீசார் அழைத்துச் சென்று உள்ளனர். கோர்ட்டில் ஆஜராகி விட்டு திரும்பும் போது, தனேஷ் ஆபாச வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதுகுறித்து கோட்டாறு போலீசில், பெண் போலீஸ் அஞ்சு புகார் கொடுத்துள்ளார். அதில், தனேஷ் ஆபாசமாக பேசியதோடு, பணி செய்யவிடாமல் தடுத்ததாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தனேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.