» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆட்கள் தேர்வு : கல்லூரி மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 24, மே 2022 12:34:22 PM (IST)
சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தேர்வு மையம் வாயிலாக இந்திய ஏர்மென் பணிக்கு தகுதி வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது தொடர்பாக குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய விமானப்படையில் ஏர்மேன் பணியில் சேர விருப்பமுள்ள 17 வயது முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்களை (ஆண்கள் மட்டும்) கண்டறிய இந்திய விமானப்படை ஆட்தேர்வு மையம், தாம்பரம் முடிவு செய்துள்ளது. ஏர்மேன் பணிக்கு சேருவதற்கான கல்வித்தகுதி பனிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி ஆகும். பனிரெண்டாம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
விமானப்படையில் சேர விருப்பம் தெரிவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிக அளவில் இளைஞர்கள் விருப்பம் தெரிவிக்கும் இடங்களில் விமானப்படைக்கான ஏர்மேன் தேர்வு நடத்தப்படவுள்ளது. ஏர்மேன் பணிக்கு சேர விரும்பும் இளைஞர்களின் விருப்பத்தை கண்டறிய இந்திய விமானப்படையால் ஒரு கூகுள் லிங்க் உருவாக்கப்பட்டு அதில் ஒரு படிவம் (Google Forms) அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் கூகுள் லிங்க் அனுப்பப்படவுள்ளது.
எனவே, ஏர்மேன் பணிக்கு சேரவிரும்பும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படவுள்ள லிங்க்-வுடன் இணைக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தை பூர்த்தி செய்யுமாறும், கல்லூரி படிப்பை முடித்த தகுதியுள்ள இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் அலுவலகத்திற்கு நேரில் வந்து இந்த கூகுள் படிவத்தினை பூர்த்தி செய்யுமாறும் அல்லது 9499055932 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கூகுள் லிங்க் –ஐ பெற்றுக் கொண்டு அதில் கண்டுள்ள கூகுள் படிவத்தினை பூர்த்தி செய்யுமாறும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்கள்.