» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அமிர்தா கல்வி நிறுவனங்களின் பட்டமளிப்பு விழா
செவ்வாய் 24, மே 2022 10:10:38 AM (IST)
இறச்சகுளம் அமிர்தா கல்வி நிறுவனங்களான அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, அமிர்தா கல்வியியல் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா அமிர்தேஸ்வரி கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஜெயமோகன் பிள்ளை, ஐ.ஏ.ஏஸ் (ஓய்வு) தலைமை வகித்து பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். தனது பட்டமளிப்பு உரையில், இக்காலச் சூழ்நிலையில் மாணவர்கள் வெற்றி வாகைச் சூடுவதற்கான குறிப்புகளை வழங்கினார். மேலும் அமிர்தா கல்வி வளாக சூழலில் வளர்ந்த நீங்கள் செல்லுகின்ற இடங்களில் உயர்ந்த உச்சத்தை தொடுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள்.
அமிர்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ். ராமசுப்பன், ஐ.ஏ.ஏஸ் (ஓய்வு) பட்டமளிப்பு விழாவினை துவக்கி வைத்து பேசுகையில், கல்வி என்பது குறிப்பிட்ட காலகட்டத்தில் முடித்து செல்வது மட்டும் அல்ல. உங்களுடைய அனுபவங்களை கொண்டு திறன்களை வளர்த்து கொள்வதோடு, மேன்மேலும் கற்பித்தலில் முன்னோக்கி பயணம் செய்வதற்கு ஒரு ஊன்றுகோலாக அமைய வேண்டும் என்று உரையாற்றினார். அமிர்தா கல்வி நிறுவனங்களின் கல்விசார் இயக்குநர் கண்ணன் முன்னிலை வகித்து பட்டமளிப்பு நடவடிக்கைகளை சிறப்புற செயல்படுத்தினார்.
அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் (பொ) சம்பத் குமார் வரவேற்புரை வழங்கினார். அமிர்தா கல்வியியல் கல்லூரியின் முதல்வர் எம். கிருஷ்ண குமார் ஆண்டறிக்கையினை வழங்கினார். இளம் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் தங்களுடைய பட்டங்களைப் பெற்றுக் கொண்டு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். விழாவில் அமிர்தா கல்வி நிறுவனங்களின் நிர்வாக மேலாளர் பிரபாகரன், அனைத்து குழு ஒருங்கிணைப்பாளர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.