» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
திருச்செந்தூர் கோயிலில் தைப்பூசத் திருவிழா : பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது!
செவ்வாய் 18, ஜனவரி 2022 11:42:04 AM (IST)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது.
சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து, விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 11 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் புறப்பாடு உள் பிரகாரத்தில் நடைபெறுகிறது. வழக்கமாக தைப்பூசத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோவில் நுழைவு வாயில் டோல் கேட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
sankarJan 18, 2022 - 04:36:56 PM | Posted IP 162.1*****