» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
கன்னியாகுமரியில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் துவக்கம் : அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டார்!
திங்கள் 10, ஜனவரி 2022 4:39:35 PM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் பார்வையிட்டார்
கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையின் சார்பில், வடசேரி நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், முன்னிலையில் இன்று (10.01.2022) நடைபெற்றது.
இம்முகாமினை, தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு, தெரிவிக்கையில்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சுகாதாரப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியினை இன்று காலை சென்னையில் துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
நமது மாவட்டத்தில் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். இதுவரை 11 இலட்சத்து 89 ஆயிரத்து 529 நபர்களுக்கு முதல்டோஸ் தடுப்பூசியும், 9 இலட்சத்து 969 நபர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 79 சதவீதம் பேருக்கு முதல்டோஸ் தடுப்பூசியும், 60 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி 9 மாதம் முடிந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் இந்த மாத இறுதிக்குள் 26 ஆயிரத்து 500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார். இம்முகாமில், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சு.மீனாட்சி, மாநகர நல அலுவலர் மரு.விஜயசந்திரன், வழக்கறிஞர் மகேஷ், முனைவர்.பசலியான், சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.