» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து: வெறிச்சோடியது குமரி சுற்றுலா தலங்கள்!

வெள்ளி 7, ஜனவரி 2022 5:31:26 PM (IST)

கன்னியாகுமரியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. 

கரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும் இன்றுமுதல் மறு உத்தரவு வரும் வரை 3 நாட்கள் தொடர்ந்து படகு போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்லாத வகையில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி கன்னியாகுமரியில் உள்ள சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் நான்கு வழிசாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள சிலுவை நகரில் இருந்து கடற்கரை பகுதிக்கு செல்லும் சாலைகளிலும் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வடக்கு நுழைவு வாசல் அருகில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பாதையும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் உள்ள கடைகள் மட்டும் மூடப்பட்டு இருந்தன.  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்து சென்றனர். இன்றும் ஏராளமானோர் திற்பரப்பு அருவிக்கு வந்தனர். 

ஆனால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பிச் சென்றனர். வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், திக்குறிச்சி பீச், மாத்தூர் தொட்டி பாலம், குளச்சல் பீச் உள்பட அனைத்து சுற்றுலாத்தலங்களிலும் இன்று காலை சுற்றுலா பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சுற்றுலாத்தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory