» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் சிக்னல் கோளாறால் விபத்து : ரயில் என்ஜின் தடம் புரண்டது
திங்கள் 6, டிசம்பர் 2021 4:12:18 PM (IST)
நாகர்கோவிலில் ரயில் என்ஜின் தடம் புரண்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உணவுப் பொருட்களை இறக்குவதற்கு தனியாக தண்டவாளம் வசதி உள்ளது. இங்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வேறு மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரயிலில் கொண்டு வரப்படும் உணவுப் பொருட்கள் இந்த தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இறக்கப்படும். பின்னர் உணவுப் பொருட்கள் அங்கிருந்து லாரிகள் மூலமாக கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த தண்டவாளத்தில் டீசல் என்ஜினில் மட்டுமே ரயிலை இயக்க முடியும்.
நேற்று இரவு அந்த தண்டவாளத்தில் இருந்து எஞ்சின் ஒன்று புறப்பட்டு சென்றது. சிக்னல் கோளாறு காரணமாக அந்த ரயில் என்ஜின் திடீரென தடம் புரண்டது. என்ஜினின் மூன்று சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியது. இதுகுறித்து நாகர்கோவில் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் ரயில் என்ஜின் தடம் புரண்டது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மீட்பு ரயில் வரவழைக்கப்பட்டது. இதையடுத்து நள்ளிரவு தடம் புரண்ட ரயில் என்ஜினை ஊழியர்கள் மீட்டனர். ரயில் என்ஜின் தடம் புரண்டதால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இன்று காலையிலும் வழக்கம்போல் ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டது. ரயில் என்ஜின் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு காரணமான ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.