» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் மீண்டும் கனமழை: வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள் - போக்குவரத்து துண்டிப்பு!

செவ்வாய் 30, நவம்பர் 2021 11:23:29 AM (IST)



குமரியில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் மீண்டும் ஆற்றங்கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. மலையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் குமரி கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக குமரியில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நீர்ப்பிடிப்பு மற்றும் குமரி மேற்கு மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. அதிலும் சிற்றார்-1, சிற்றார்-2 அணை பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டது. எனவே கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் ஒரு பக்கம், அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் உருவான மழை வெள்ளம் ஒரு பக்கம் என ஒரு சேர சேர்ந்து ஆறுகளில் சென்றதால், காட்டாற்று வெள்ளமாக பெருக்கெடுத்தது. குழித்துறை தாமிரபரணி, கோதையாற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி மழை வெள்ளம் சென்றது. நேரம் செல்ல செல்ல ஆற்றுக்குள் கட்டுக் கடங்காத தண்ணீர் மீண்டும் ஊருக்குள் வெள்ளமாக புகுந்தது.

இதில் தாமிரபரணி ஆற்றின் கடைகோடி பகுதியான வைக்கல்லூர், பருத்திகடவு, பள்ளிக்கல், பணமுகம், மங்காடு, அதங்கோடு, பாலாமடம், மாம்பழஞ்சி, சமத்துவபுரம், ஏழுர்முக்கு, ஏழுதேசம், கொல்லங்கோடு மஞ்சதோப்பு, தோட்டைக்காடு, முன்சிறை, பார்த்திபபுரம், பரக்காணி  உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பை சந்தித்தது.

மழை வெள்ளத்தால் கடந்த ஏப்ரல் மாதம், அக்டோபர் மாதம் மற்றும் இந்த மாதத்தில் 2 முறை என 4 தடவை இந்த கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளான களியல், கடையால், சிதறால், சென்னிதோட்டம் கிராமங்களையும் தண்ணீர் சூழ்ந்து மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள்.வள்ளியாற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கக்கோட்டுதலை, மைகுளம் கிராமம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்து சாலைகளில் பெருக்கெடுத்தது. இதனால் ஏராளமான வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. 

மேற்கு மாவட்டத்தில் குற்றியாறு, மோதிரமலை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே மலை கிராமங்களுக்கு போக்குவரத்து தொடர்ந்து துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட மக்கள் நகரங்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நித்திரவிளை அருகே விரிவிளை சாலையில் தண்ணீர் 4 அடி உயரத்துக்கு தேங்கியிருப்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பத்துகாணி, ஆறுகாணி பகுதியிலும் மழை வெள்ளத்தால் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 12, 13-ந் தேதிகளில் பெய்த தொடர் மழையால் குமரி மாவட்டம் ஏற்கனவே வெள்ளக்காடாக மாறியிருந்தது. தற்போது மீண்டும் ஆற்றங்கரையோர பகுதிகளில் உள்ள பெரும்பாலான கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். வெள்ளம் வடிந்து ஒரு சில நாட்கள் தான் எங்களுடைய வீடுகளில் தங்கியிருந்தோம், இப்போது மீண்டும் வெள்ளம் புகுந்ததால் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகள், முகாம்களில் சென்று தங்க புறப்பட்டுள்ளோம் என வேதனையுடன் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory